உள்ளூர் செய்திகள்
வட மாநில வாலிபர் பட்டப்பகலில் காரில் கடத்தல்

சேலத்தில் வட மாநில வாலிபர் பட்டப்பகலில் காரில் கடத்தல்- மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2022-06-02 17:04 IST   |   Update On 2022-06-02 17:04:00 IST
சேலத்தில் வட மாநில வாலிபரை காரில் கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம்.இவர் சேலம் பட்ட கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21) இவர் இன்று காலை பட்டை கோவில் பகுதியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 கார்களில் வந்த கும்பல் திடீரென ஜெயராமை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது . இதனை பார்த்த அந்த பகுதியினர் இந்த கும்பலை பிடிக்க முயன்றனர் ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பியது.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் சம்பவம் குறித்து சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரித்தனர்.

அப்போது போதை புகையிலை கடத்தல் தொடர்பாக ஓசூர் போலீசாரிடம் ஒரு கும்பல் சிக்கிய நிலையில் அதற்கு ஜெயராம் மற்றும் அவரது தந்தை தான் காரணம் என்றும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கடத்தியதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அவரை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News