உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

Published On 2022-06-02 15:32 IST   |   Update On 2022-06-02 15:32:00 IST
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்புப் பணி கடந்த 24 ந்தேதி தொடங்கியது.

உடுமலை:

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் குளிர் காலத்தில் யானை ,புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் கடக்க கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்புப் பணி கடந்த 24 ந்தேதி தொடங்கியது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:-

கணக்கெடுப்பு பணிக்கு ஏதுவாக உடுமலை அமராவதி வனச்சரகங்கள், மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனசரகங்களில் உள்ள 34 சுற்றுகளில், 53 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டது.

வனப் பணியாளர்கள், செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதல் மூன்று நாட்களில் சுற்றுகளில் காணப்பட்ட புலி சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப் பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்பட்ட இரை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள் குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரில் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளன்றுவனக் கணக்கெடுக் கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு கோவையில் உள்ள கள இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர்கள் சிவகுமார், சுரேஷ், முருகேசன் உள்ளிட்ட வர்கள், மற்றும் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். கணக்கெடுப்பு பணியின் போது யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தையின் காலடி தடம் உள்ளிட்டவை நேரடியாக பார்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News