புதுவையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பலி
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி(வயது55). இவரது அண்ணன் மகள் திருமணம் புதுவையில் இன்று காலை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குமாரசாமி தனக்கு சொந்தமான காரில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.
காரை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முத்து (50) ஓட்டி வந்தார்.
ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே கார் வந்த போது எதிரே புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்தது. அப்போது கண்டெய்னர் லாரி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென குறுக்கே பாய்ந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பினார்.
அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் வந்த முத்துகுமாரசாமி மற்றும் காரை ஓட்டி வந்த முத்து ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மேலும் கண்டெய்னர் லாரி டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்தவரும் லேசான காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் கோரிமேடு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
அண்ணன் மகள் திருமணத்தில் பங்கேற்க வந்த சித்தப்பா மற்றும் அவரது நண்பர் பலியான சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.