உள்ளூர் செய்திகள்
கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார கேடு - நடவடிக்கைகோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-31 09:24 GMT   |   Update On 2022-05-31 09:24 GMT
திருவெண்காடு-மங்கைமடம் இடையே சாலையோரம் தனியாரால் கொட்டப்படும் மருத்துவ, இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கைகோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்ததினர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு - மங்கைமடம் இடையே அமைந்துள்ள மணிகரனையாற்றின் கரையோரமும் பிரதான சாலையோரமும் இருந்த குளத்தை ஆக்கிரமித்தும் இரண்டு ஊராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் கொட்டி வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனிநபர்கள் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் காற்றின் காரணமாகவும் குப்பைகள் சரிந்தும், அருகில் உள்ள நீர் நிலைகளில் காற்றில் குப்பைகள் அடித்து செல்வதால் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அவ்வப்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கபடுவதால் புகை மூட்டத்தாலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஊராட்சியே குளத்தை மூடி குப்பைகளை கொட்டியதுடன் ஆற்றின் கரையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய தனிநபர்களும் அபாயகரமான மருத்துவ கழிவுகுப்பைகள், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குப்பைகளையும் இறைச்சி கழிவு துர்நாற்றத்தையும் கடந்தே திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

எனவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாகன ஓட்டிகள் இணைந்து கண்ணில் கருப்பு துணி கட்டி குப்பை கொட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றின் கரையோரமும், கொட்டப்படும் கழிவுகளை, குப்பைகளை உடனே அகற்றவும் குப்பைகளால் மூடப்பட்ட குளத்தை மீட்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News