உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து

மதுராந்தகம் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்தது- சென்னை பெண்கள் 2 பேர் பலி

Published On 2022-05-30 07:52 GMT   |   Update On 2022-05-30 07:52 GMT
மதுராந்தகம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மதுராந்தகம்:

சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 53 பேர் தனியார் சொகுசு ஆம்னி பஸ்சில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் 4 நாட்கள் சுற்றுலா முடிந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் சென்னையை சேர்ந்த நாதிஷா (வயது50) என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த சென்னை திருவான்மியூரை சேர்ந்த டில்லிராணி உள்பட 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News