உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-29 15:45 IST   |   Update On 2022-05-29 15:45:00 IST
மயிலாடுதுறையில் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் மீது நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் பேருந்து நிலையம் மற்றும் வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதால் ரூபாய் 500 வரை அபராதம் விதித்தும், வியாபாரிகளின் தராசுகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடமிருந்து சொற்ப அளவில் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்பனை செய்யும் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி துறையினரை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். 

சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துறை அதிகாரிகள், போலீசார். பேச்சுவார்த்தை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும், பிளாஸ்டிக் பை விற்பனை செய்யும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News