உள்ளூர் செய்திகள்
சாலையில் முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன - மின்சாரம் துண்டிப்பு

Published On 2022-05-28 08:56 GMT   |   Update On 2022-05-28 08:56 GMT
சீர்காழியில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீர்காழி:

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக கத்திரிவெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுவந்தனர்.இதனிடையே சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோயில், திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்தமழை பெய்யத் தொடங்கியது.

திடீரென பலத்த காற்றும் வீசியது. இதனால் நகரில் தேர் வடக்கு வீதி பிரதான சாலையில் வேப்பமரம் வேரூடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மழை பெய்ததால் சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறித்து அறிந்த அப்பகுதி வார்டு உறுப்பினர் முபாரக் சீர்காழி தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் அளித்தார்

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் வார்டு உறுப்பினர் முபாரக் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். இதேபோல் சீர்காழி அடுத்த அகணி ஊராட்சி தென்னங்குடி பகுதியில் மின்கம்பி பலத்த காற்றில் அறுந்து சாலையோரம் தாழ்வாக தொங்கியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் உஷ்ணம் குறைந்துபொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News