உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா மாவட்ட தலைவர் தயா சங்கர் பேட்டியளித்த காட்சி.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு 5-ந் தேதி வருகை

Published On 2022-05-27 09:43 GMT   |   Update On 2022-05-27 09:43 GMT
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 5-ந் தேதி நெல்லை வருவதாக மாவட்ட தலைவர் தயாசங்கர் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் ஆட்சி 8-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.வருகிற 5-ந் தேதி ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிகுளத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

ஜூன் 15-ம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும், அரசின் திட்டங்களால் ஏற்படும் பயன்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

மேலும் மத்திய அரசு சாதனை தொடர்பாக பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 70 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. படிப்படியாக ஒவ்வொரு மாநிலமும் விலையை குறைத்து வரும் நிலையில் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.
 
அப்போது மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News