திருப்பூர் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
திருப்பூர்:
திருப்பூரில் வாரந்தோறும் நடக்கும் கால்நடை சந்தையில், பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மாடுகளை வாங்க வருவர். உள்ளூர் விவசாயிகள், தாராபுரம், உடுமலை, குண்டடம், குன்னத்துார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்பர்.
கால்நடை எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், விலையும் வியாபாரிகள் எதிர்பார்க்கும் அளவில் இருப்பதால், கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகளும் கலந்து கொள்வர். கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக, சந்தைக்கு மாடு வரத்து வெகுவாக குறைந்தது. தற்போது வெயில் அடிப்பதால் சந்தைக்கான கால்நடை வரத்து சற்று உயர்ந்துள்ளது.
கடந்த திங்கட்க்கிழமை நடந்த சந்தைக்கு 600 மாடுகள் வந்தது. கன்றுக்குட்டிகள், 8,000 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரையும், பெரிய மாடுகள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம், தரம் உயர்ந்தவை 45 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இது குறித்து சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பண்டிகையின் போது மாடு வரத்து இருந்தாலும் விலையில் கிராக்கி நிலவியது. மழை பெய்ததால், பசும்புல் வளர்ச்சி அதிகமாகியது. பலரும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதை நிறுத்தினர். தற்போது வெயில் அடித்து வருவதால் ஏலத்துக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விலையும் கட்டுக்குள் உள்ளது என்றனர்.