உள்ளூர் செய்திகள்
சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
உசிலம்பட்டி சாலையில் பூக்களை கொட்டி வியாபாரிகள் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தினசரி சந்தையில் உள்ள மலர் மற்றும் பூ வியாபாரிகள், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் கமிஷன் மண்டி நல உரிமையாளர் சங்கத்தினர் பஸ் நிலையம் முன்பு இன்று காலை திரண்டனர்.
சுமார் 200 கடைகளை சேர்ந்த உரிமையாளர்கள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடைகள் நடத்தி வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மறு வாடகைக்கு டெண்டர் விடுவதை கண்டித்து வியாபாரிகள் பூக்களை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் அருண்கு மார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பிறகு வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.