உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள்
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வெள்ளூர் கஸ்பா, வரதராஜபுரம், வாழவல்லான், கொட்டாரகுறிச்சி, பழையகாயல் ஆகிய கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க விழா முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து சாகுபடி நிலமாக மாற்றுதல் மற்றும் அதற்கான நீர்வள ஆதாரங்களை அமைத்தல் போன்ற திட்டங்களை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறைகள் இணைந்து இத்திட்டத்தில் அனைத்து பண்ணை குடும்பங்களும் பயன் பெறும் நோக்கில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி தென்னை கன்றுகள், கைத்தெளிப்பான், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, வீட்டு காய்கறி விதை, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வனஜா தேவி 5 பஞ்சாயத்துகளிலும் நிகழ்ச்சி நடைபெற தேவையான ஏற்பாடுகள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.