உள்ளூர் செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கோவில்பத்து கிராமத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. அந்தப் பகுதிக்கு சரியான முறையில் மின்சாரம் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பலமுறை மின் வாரியத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு மின்சாரம் தடை செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசிக்கும் லட்சுமி (வயது 50) என்ற பெண்ணை தேள் ஒன்று கொட்டியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தை தீடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.