உள்ளூர் செய்திகள்
பட்டாசு மற்றும் தீப்பந்தங்ளுடன் வன காவலர்கள் இரவு ரோந்தில் ஈடுபட்ட காட்சி.

மணிமுத்தாறில் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

Published On 2022-05-25 15:14 IST   |   Update On 2022-05-25 15:14:00 IST
மணிமுத்தாறில் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அணை பகுதியில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் உள்ளதால் பலர் ஆடு, மாடு வளர்ப்பதோடு விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

அதே சமயம் இங்கு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தபடி இருந்தது.

2 நாட்களுக்கு முன்பு  குடியிருப்பு பகுதியில் தனது குட்டியுடன், தாய் கரடி ஒன்று உலா வந்துள்ளது. அதன் பிறகு அந்த கரடி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொது மக்கள் கரடியை தற்காலிகமாக காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை தூக்கி சென்று கடித்து கொன்று விட்டது.

இவ்வாறு அடிக்கடி காட்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தொந்தரவு செய்வதை தடுத்திட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் சுரேஷ் பாலமுருகன் வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 10 பேர் நேற்று இரவில் மணிமுத்தாறு குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குக்களை விரட்ட தீப்பந்தம் ஏற்றி இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணிமுத்தாறு காவலர்கள் பயிற்சி 9-வது அணி கமெண்டான்ட் வீட்டின் பின்புறத்தில் கரடி தன் குட்டி உடன் சுற்றித்திரிவதை கண்டு அவைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

பொது மக்கள்  இரவு நேரத்தில் வீட்டை வீட்டு வெளிவர நேர்ந்தால் கையில் தீப்பந்தம் வைத்துக் கொள்ளுமாறு வனத் துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News