உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

பூட்டிய வீட்டில் இறந்த கணவர் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த மனைவி- போலீசார் விசாரணை

Published On 2022-05-24 15:36 IST   |   Update On 2022-05-24 15:36:00 IST
கணவரின் இறந்த உடலுடன் மனைவி பத்மினி 3 நாட்கள் இருந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கணவர் உடல் அருகேயே இருந்து இருப்பது தெரியவந்தது.
சென்னை:

புரசைவாக்கம், சைக்கிள்காரன் தெருவைச் சேர்ந்தவர் அசோக் பாபு (வயது53). இவர் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் வேலையும், கட்டுமான வேலைகளும் செய்து வந்தார். இவரது மனைவி பத்மினி(48).

இவர்களது மகள் ஆர்த்தி திருமணமாகி மும்பையில் வசித்து வருகிறார். மகன் அரவிந்த் பெங்களூரில் கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பத்மினிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கணவன்-மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை ஆர்த்தி, புரசைவாக்கத்தில் உள்ள தந்தை அசோக்பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்போனுக்கு அழைத்தபோது அதனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. பூட்டிய வீட்டுக்குள் பத்மினி இருந்தார். ஆனால் அவர் கதவை திறக்க மறுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது நிர்வாண நிலையில் அசோக்பாபு இறந்து கிடந்தார். அதன் அருகில் அவரது மனைவி பத்மினி அமர்ந்து இருந்தார். வெளியே வர மறுத்த பத்மினியை போலீசார் வலுக்கட்டாயமக இழுத்து வெளியேற்றினர்.

அசோக்பாபுவின் உடல் அழுகிய நிலையில் உப்பி காணப்பட்டது. மார்புக்கு மேலும், இரண்டு கை மற்றும் கழுத்தின் அருகில் தோல் உறிந்த நிலையில் இருந்தது.

கணவரின் இறந்த உடலுடன் மனைவி பத்மினி 3 நாட்கள் இருந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கணவர் உடல் அருகேயே இருந்து இருப்பது தெரியவந்தது.

அசோக்பாபு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News