உள்ளூர் செய்திகள்
கொலை

சோளிங்கரில் தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2022-05-24 07:15 GMT   |   Update On 2022-05-24 07:15 GMT
சோளிங்கரில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி இந்திராணி, இவர்களது மகன் கஜேந்திரன் (வயது43) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ் (15) என்ற மகனும், சமித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.

கஜேந்திரனுக்கும் சரஸ்வதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சரஸ்வதி தனது தாய் வீடான ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன் கஜேந்திரனின் மகன் சுரேஷ் ராஜா நகரத்தில் நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில் காப்பு கட்டியிருந்த நிலையில் குளத்திற்கு குளிக்கப் சென்ற போது நீரில் முழ்கி இறந்தான்.

தன் மகன் இறந்த சோகத்தில் கஜேந்திரன் குடிக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தன்மகன் இறப்புக்கு மனைவியின் அஜாக்கிரதைதான் காரணம் என மனைவியுடன் கடந்த 10 நாட்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி சரஸ்வதியை அழைத்து வந்து வீட்டில் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

இரவு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி சரஸ்வதியை காணவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தை கன்னியப்பனிடம் சரஸ்வதி குறித்து கேட்டுள்ளார்.

அப்போது கன்னியப்பனுக்கும் கஜேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. இதில் கஜேந்திரன் கன்னியப்பன் கன்னத்தில் அறைந்து தாக்கினார். அருகில் இருந்த கட்டிலில் விழுந்து கன்னியப்பன் காயமடைந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் இந்திராணியும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News