உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-05-23 07:12 GMT   |   Update On 2022-05-23 07:12 GMT
ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகும் போது தென்காசிக்கு வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளத்தில் புதிய மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். மறு ஆண்டே இந்தக் கல்லூரி வாடகை கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.

இரண்டே ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். தற்போது செயல்பட்டு வரும் வாடகை கட்டிடத்தில் போதிய வசதிகள், வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

  இந்தக் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட ஆலங்குளம் மலை அடிவாரத்தில் சுமார் 16 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் வெறும் ஐந்து ஏக்கர் மட்டுமே தற்போது கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்தான் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.‌

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட கலெக்டர், நெல்லை எம்.பி. ஆகியோர் வந்து அடிக்கல் நாட்டினர்.

கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனெனில் வரும் காலங்களில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தற்போதுள்ள இடம் போதுமானதாக இருக்காது.

16 ஏக்கர் நிலமே கல்லூரிக்கு குறைவான இடம் என்ற சூழலில் நீதிமன்றத்திற்கும் ஒதுக்கீடு செய்தால் வரும் காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

 இதுகுறித்து ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு சொந்தக் கட்டடம் கட்ட தற்போது கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு நேர் எதிரே ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் நிலம் உள்ளது.

இதனை நீதிமன்றத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் ஒதுக்கீடு செய்து கல்லூரிக்கு முழுவதும் உள்ள 16 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News