உள்ளூர் செய்திகள்
கடனுக்கு மது பாட்டில் கொடுக்க மறுத்த பார் கேஷியரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் மரியாள்நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது62). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மதியம் இவர் மதுக்கடையில் இருந்த போது அவரிடம் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டார். ஆனால் ராஜா கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் முகத்தில் குத்தினார்.
இதில் வலது கண் புருவத்தில் படுகாயமடைந்து ரத்தம் கொட்டியதால் ராஜா அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சந்திரசேகர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் காயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை தேடி வருகிறார்கள்.