உள்ளூர் செய்திகள்
கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
ஏற்காட்டில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்காடு:
ஏற்காடு முருகன் நகர்,பகுதியில் அரசுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இதில் 26 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் கீர்த்தி குமார் (வயது 25 ) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 17-ந்தேதி இரவு 8 மணிக்கு வெளியே சென்றார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் பிணமாக மிதந்தது உறவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கீர்த்திகுமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து கீர்த்திகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.