கல்பாக்கம் அருகே லாரி மோதி பெற்றோர் கண்முன் மகன் பலி
மாமல்லபுரம்:
திருப்போரூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகன் நிஷாந்த் (வயது 15). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
கல்பாக்கம் அடுத்த வாயலூரில் இவர்களது உறவினர் ஒருவர் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெங்கடேசன் குடும்பத்துடன் சென்றார். பின்னர் சித்ராவின் தம்பி ரமேஷ் என்பவருடன் அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம் செய்ததால் இடம் இல்லாமல் பைக்கின் டேங்க் பகுதியில் நிஷாந்த் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. கல்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தபோத எதிரே வந்த மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். லாரியின் சக்கரத்தில் சிக்கிய நிஷாந்த் பெற்றோர் கண் முன்னே சம்பவ இடத்டதிலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு அவர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் வெங்கடேசன், அவரது மனைவி சித்ரா, ரமேஷ் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.