திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் மாயமானவர் வழிப்பறி செய்தபோது போலீசில் சிக்கினார்
திருப்பூர்:
திருப்பூரில், இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர், வழிப்பறியில் ஈடுபட முயன்றபோது போலீசாரிடம் சிக்கினார்.
திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணி ஒருவர் நடந்து சென்றார். திடீரென அவரை வழிமறித்த நபர், கத்தியை காட்டி மிரட்டினார். பணத்தை கொடுக்க மறுத்த பயணியை, கத்தியால் கையை கிழித்தார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபரை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். அவர் திருப்பூர், மண்ணரையை சேர்ந்த ராஜசேகர், 32. இவர் மீது, இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு முறை குண்டாசில் சிறைக்கு சென்று வந்தது தெரிந்தது. இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராஜசேகர் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.