உள்ளூர் செய்திகள்
கந்துவட்டி வழக்கில் பைனான்சியர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கந்துவட்டி வழக்கில் பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் காளையார்குறிச்சி தெருவில் குடியிருப்பவர் பன்னீர்செல்வம். இவர் தீப்பெட்டி தொழில் நடத்தி வருகிறார்.
தொழில் அபிவிருத்திக்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பைனான்சியர் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டி மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.
சில வருடங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட தால் பன்னீர் செல்வத்தால் வட்டியை சரிவர கொடுக்க முடியவில்லை. இதனால் பைனான்சியர் ராமு என்ற ராமசாமி தனது அலுவலகத்திற்கு பன்னீ ர்செல்வத்தை வரவழைத்து உட்காரவைத்து வட்டி ஏன் கொடுக்கவில்லை? என கூறி அடித்ததாகவும், குடும்பத்தாரைப் பற்றி அவதூறாக பேசி வெற்று பேப்பரில் கையெழுத்து, புரோ நோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராமு என்ற ராமசாமி அலுவலகத்தில் பணிபுரியும் காளிராஜ் மற்றும் விஜயராகவன் ஆகியோர் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் பைனான்சியர் ராமசாமி, அவரது அலுவலகத்தில் வேலைபார்க்கும் காளிராஜ், விஜயராகவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பைனான்சியர் ராமசாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.