உள்ளூர் செய்திகள்
பாப்ஸ்கோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாப்ஸ்கோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்த பாரதிய பாப்ஸ்கோ தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். தலைவர் ராஜூ தலைமை வகித்தார். ஏழுமலை, முருகவேல், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில தலைவர் ஆசைத்தம்பி சிறப்புரையாற்றினார்.
அனைத்த பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் வருகை பதிவேடை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து தொகையையும் வழங்க வேண்டும்.
பாப்ஸ்கோவில் இயங்கி வந்த அனைத்து பிரிவுகளையும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க பொறுப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.