உள்ளூர் செய்திகள்
மழை

கொட்டிய மழையால் புதுவை குளிர்ந்தது

Published On 2022-05-16 08:59 IST   |   Update On 2022-05-16 08:59:00 IST
முத்தியால்பேட்டை உப்பளம், முதலியார்பேட்டை லாஸ்பேட்டை, ராஜ்பவன், முருங்கபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி தீவிர புயல் காரணமாக 2 நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு புதுவையில் மழை பெய்து வந்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி புதுவையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

முத்தியால்பேட்டை உப்பளம், முதலியார்பேட்டை லாஸ்பேட்டை, ராஜ்பவன், முருங்கபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதேபோல் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மழை பெய்தது. மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் அவதிப்பட்டனர். சண்டே மார்க்கெட் வியாபாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது.

இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் புதுவை குளிர்ந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் முடிவுக்கு வரும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News