உள்ளூர் செய்திகள்
வசூல் முறைகேடு புகார் தொடர்பாக மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் காலனி தெருவில் வசிப்பவர் மாடசாமி (வயது 64) விவசாயி. இவர் வசிக்கும் பகுதியில் நாச்சியார்பட்டி ரோடு அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற மின் ஊழியர் ஆபிரகாம் சத்தியசீலன் (64) என்பவர் மின் வாரியம் மூலம் வீடுகளுக்கு பழைய மீட்டரை எடுத்துவிட்டு புதிய மீட்டர் வைப்பதற்காக பணம் வசூல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாடசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலு வலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாடசாமி, ஆபிரகாம் சத்தியசீலன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு மாடசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரதவீதியில் உள்ள டீ கடைக்கு எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஆபிரகாம் சத்தியசீலன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாடசாமியை செருப்பால் தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் சத்தியசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.