உள்ளூர் செய்திகள்
கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை
மொடக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி இட்கோறை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (21). இவர் கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் பகுதியிலுள்ள தனது அத்தை ஜெயந்தி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்செல்வன் செல்போனில் யாரிடமோ பேசி கொண்டு வெளியே சென்றார். பின்னர் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தமிழ் செல்வனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்நிலையில் அத்தை வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு தோட்ட கிணறு மேட்டில் தமிழ்ச்செல்வனின் சட்டையும், செல்போனும் இருந்தது தெரியவந்தது. தமிழ்செல்வன் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும், மொடக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடியபோது தமிழ்செல்வன் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் விசாரணையில் தமிழ்செல்வன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எந்த காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.