உள்ளூர் செய்திகள்
பள்ளிகொண்டாவில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்
பள்ளிகொண்டாவில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பார்சல் மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா அதில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.
இதனை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22), வேல்முருகன் (24) ஆகியோரை கைது செய்தனர்.
குட்கா எங்கிருந்து யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.