வத்திராயிருப்பில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயற்சி- 5 வாலிபர்கள் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் பகுதியில் ஒரு கும்பல் போலி ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களிடம் கொடுத்து மாற்ற முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சினிமாவில் பயன்படுத்தும் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இவைகளை அசல் ரூபாய் நோட்டுகளில் உள்ளே வைத்து மாற்ற முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளும், அசல் ரூ. 36,500 பறிமுதல் செய்யப்பட்டது.
போலி நோட்டுகளை அசல் ரூபாய் நோட்டுகளை வைத்து மாற்ற முயன்றதாக முயன்ற கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஜித் குமார், கூடலூர் கனகசுந்தரம், கொடிக்குளம் பூமி ராஜ், குபேந்திரன், கூமாபட்டி பாலமுருகன் ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.