உள்ளூர் செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் அரசு பள்ளி வளாகத்தில் நல மையம் கட்ட எதிர்ப்பு
வேலூர் சத்துவாச்சாரியில் அரசு பள்ளி வளாகத்தில் நல மையம் கட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரில் நகர் நல மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக நேரு நகர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்திருந்தனர்.
இன்று காலை மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளி வளாகத்தில் ஏற்கனவே போதுமான இடவசதி இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டுவதற்குக் கூட இடம் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடக்கூடிய இடத்தில் நலமையம் கட்டுவது ஏற்புடையது அல்ல.
மேலும் இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புள்ளது எனவே நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நல மையம் கட்ட கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும் அங்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மற்றொரு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நடுநிலைப்பள்ளி வளாகத்தில்நல மையம் கட்டுவதற்கு அந்த பகுதி பொதுமக்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நேரு நகர் சத்துணவு மைய வளாகத்தில் நல மையம் கட்ட முடிவு செய்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.