உள்ளூர் செய்திகள்
போளூர் அருகே மரம் விழுந்து பெண் பணியாளர் சாவு
போளூர் அருகே மரம் விழுந்து பெண் பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
போளூர்:
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் அடியோடு பெயர்ந்து கால்வாயில் விழுந்தது.
அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்துகொண்டிருந்த பூங் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சுதா (வயது 38) பார்த்திபன் மனைவி மஞ்சுளா (35) ஆகியோர் மீது தென்னைமரம் விழுந்ததில் இருவருமே படுகாயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா வரும் வழியிலே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். மஞ்சுளா மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து சுதாவின் கணவர் சங்கர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.