உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மன்மத தகனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நாளை இரவு நடக்கிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு மன்மத தகனம் நிகழ்ச்சி நாளை இரவு நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இது பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவையொட்டி தினமும் காலையில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
மேலும் இரவு சுமார் 7 மணியளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதன் பின்னர் சேடி பெண் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று 8-ம் நாள் விழாவை முன்னிட்டு இரவு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளித்தார்.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பொம்மை வடிவிலான சேடிப்பெண் சாமி மீது பூச் சொரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் இரவு சுமார் 10 மணியளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மர தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.