உள்ளூர் செய்திகள்
தனியார் நிதி நிறுவனம் திடீர் மூடல்-பொதுமக்கள் அதிர்ச்சி
ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் டெபாசிட் தொகை பெற்ற தனியார் நிதி நிறுவனம் திடீரென்று மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை கட்டியுள்ளனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் சாலையோர பூ மற்றும் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என நூற்றுக்கணக்கானோர் தினசரி சேமிப்பு என்ற முறையில் தினமும் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவகையில் ரூ100 முதல் 5 ஆயிரம் வரை என தினசரி பணம்கட்டி சேமித்து வந்தனர்.
இதற்காக தினசரி அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று பணத்தை வசூல் செய்து வந்தனர். மேலும் நிரந்தர வைப்புத் தொகை என பலரும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசூல் செய்வதற்கு யாரும் வராததால் இதுகுறித்து நிறுவன தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் நிறுவன அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்பட்டாதது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டெபாசிட் மற்றும் சேமிப்பு பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சேமிப்பு காலம் பலருக்கு முதிர்வடைந்த நிலையில், சேமிப்பு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் கொடுத்தபோது, பணம் இல்லாமல் காசோலை திரும்பியதாகவும் பலர் குற்றம் சுமத்தினர்.
மேலும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் பூட்டப்பட்ட சம்பவம் அங்கு பணம் கட்டிய பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும் நிதி நிறுவன ஜெயங்கொண்டம் கிளை பொறுப்பாளர் சரவணன் என்பவரை ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததில் சரவணன் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியபோது 10 நாட்களுக்குள் உரியவர்களுக்கு பணத்தை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.