உள்ளூர் செய்திகள்
கலசப்பாக்கம் பகுதியில் சூறாவளி காற்றால் 70-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மரங்கள் முறிந்து நாசம்
கலசப்பாக்கம் பகுதியில் சூறாவளி காற்றால் 70-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து நாசமானது.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம், கெங்கநல்லூர், கணேஷபுரம், கோவூர், சீட்டம்பட்டு, அணியாலைகாம்பட்டு உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பனை, தென்னை, வாழை மரங்கள் காற்றில் முறிந்து கீழே விழுந்து நாசம் அடைந்துள்ளன. மேலும் விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், கரும்பு ஆகியவையும் காற்றில் சாய்ந்து நாசம் அடைந்து உள்ளன.
மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்து உள்ள காரணத்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடிநீருக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது 10-ம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 அரசு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் இரவு நேரத்தில் படிப்பதற்கு அவதி படுகின்றனர்.
இதனால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறை அதிகாரிகளும் சேதம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.