உள்ளூர் செய்திகள்
வானிலை நிலவரம்

அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது

Published On 2022-05-12 14:40 IST   |   Update On 2022-05-12 14:40:00 IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திர கடலோர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காக்கிநாடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8-ந்தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம் - ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது.

இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில்  கனமழை பெய்தது. திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே ஆந்திர கடலோர பகுதயில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை (அசானி புயல் சின்னம்) கடந்த 6 மணி நேரம் அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. இது அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வசூவிழந்து மசூலிப்பட்டினத்தின் மேற்கு பகுதி அருகே உள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது அதே பகுதியில் மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக  மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக ஆந்திர கடலோர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காக்கிநாடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடற்கரையோரம் இருந்த சாலைகள் கடல் சீற்றத்தில் சேதம் அடைந்தது.

கடந்த 2 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பயிர்கள் சேதமடைந்தது. எஸ் ராயவரத்தில் இருந்து ஒப்புர பள்ளிக்கு சீனிவாசராவ் என்பவர் பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது சூறாவளி காற்று வீசியதால் சாலையோரம் இருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்து சீனிவாசராவ் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் அமலாபுரம் காமன கருவு பகுதியை சேர்ந்த அப்பன்னா என்பவர் குடிசை வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் நெல்லூர் அந்தங்கி பகுதியில் இடி தாக்கி வாலிபர் ஒருவர் இறந்தார். இன்று காலை முதல் மசூலிபட்டினம் கடலில் சீற்றம் அதிகமாக உள்ளது. நெல்லூர், பிரகாசம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Similar News