உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

இருளர் இன மாணவனை தீயில் தள்ளி கொல்ல முயற்சி- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 மாணவர்கள் மீது வழக்கு

Published On 2022-05-11 10:55 GMT   |   Update On 2022-05-11 10:55 GMT
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருளர் வகுப்பை சேர்ந்த மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டிநெருப்பில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம்:

திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி அண்ணாநகரை சேர்ந்தவர் கன்னியப்பன் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது மகன் சுந்தரராஜன் (வயது11). அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தரராஜனை பள்ளிக்கு போகும்போது சாதி பெயரை சொல்லி அழைத்து, அவமானம் செய்தனர்.

இதுதொடர்பாக மாணவன் சுந்தரராஜன் தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே கன்னியப்பன், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் சுந்தரராஜன் தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றார். கருமகாரிய கொட்டகை அருகே சென்ற போது அங்கு நின்ற 3 மாணவர்கள் நீ எப்படி பள்ளியில் தெரிவிக்கலாம் என கூறி தகராறு செய்தனர். அதோடு சாதி பெயரை கூறி சுந்தரராஜனை அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். தீயில் விழுந்த மாணவன் சுந்தரராஜன் வேதனையால் அலறித்துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இது பற்றி பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பதறி போன அவர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். அங்கு மாணவன் சுந்தரராஜன் முதுகு மற்றும் வயிறு பகுதியில் படுகாயத்துடன் அழுது கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுந்தரராஜனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்த திண்டிவனம் சப்கலெக்டர் அமித் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சுந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது பற்றி வெள்ளிமேடு பேட்டை போலீசில் புகார் செய்ப்பட்டது. போலீசார் 3 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருளர் வகுப்பை சேர்ந்த மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டிநெருப்பில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News