உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் விபரீதம் விஷம் குடித்து தொழிலாளி பரிதாப சாவு
சேலம் வீராணம் அருகே குடும்ப தகராறில் விபரீதம் விஷம் குடித்த வெல்டிங் தொழிலாளி பரிதாப சாவு.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள தைலானூர் வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 38). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பணம் 4 ஆயிரம்மற்றும் குழந்தைகளின் வெள்ளி கொலுசு ஆகியவற்றை எடுத்துச் சென்று கோபி மது குடித்ததாக தெரிகிறது. இதை அறிந்த இவரது மனைவி லட்சுமி கோபியிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கணவரை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் வெளியே சென்ற கோபி மாலையில் வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். தனது மகளிடம் என்னால் உங்களுக்கு இனிமேல் தொந்தரவு இருக்காது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட லட்சுமி கணவரிடம் விசாரித்தபோது தான் ஏற்கனவே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.