உள்ளூர் செய்திகள்
தலைமை பண்புகள் குறித்த கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவர்களுக்கு தலைமை பண்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைச் சார்பாக ராணுவ வழியில் தலைமைப் பண்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக லடாக்கில் பணியாற்றும் இந்திய ராணுவத்தில் தளபதி ஸ்ரீகணேஷ் ராமன் கலந்துகொண்டு பேசியதாவது:
மாணவ சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்று ஒழுக்கமாகும். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். ஒழுக்கமாக இருப்பதினால் எந்த செயலை வேண்டுமானாலும் மிகவும் நேர்மையுடனும், துணிவுடனும் செய்திட முடியும். அது மட்டுமில்லாமல் மிகவும் பொறுப்புணர்வடன் அதை செய்து முடிக்க முடியும்.
உங்கள் வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும் அதை திறம்பட கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய உங்களுக்கு எது மிக முக்கியம் என்றால் நேர மேலாண்மை, கற்பித்தல், விளையாட்டு, குடும்பம் என சரியாக நேரம் ஒதுக்கி பயன்படுத்த வேண்டும்.
மாணவ பருவத்திலேயே மனித மாண்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கடைபிடித்து ஒரு சிறந்த மாணவனாக மட்டுமின்றி நல்ல குடிமகனாகவும் திகழ வேண்டும். இங்கு இருக்கக் கூடிய ஒவ்வொருவரும் தங்களது கடமை என்ன என்பதை உணர்ந்து செயல்பட்டு வாழ்வில் முனைனேற்றமடைய வேண்டும் என்றார்.
முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெற்றிவேலன் வாழ்த்தி பேசினார்.
தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை முதன்மையர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.