உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, ஏக்குனி, காரபிள்ளு, உல்லத்தி உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, ஏக்குனி, காரபிள்ளு, உல்லத்தி உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
கல்லட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பலத்த இடியுடன் பெய்த கனமழை காரணமாக அழகா் மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.
இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கற்களும், களி மண்ணும் புகுந்ததால் மக்கள் மிகவும் அவதியடைந்தனர். பாறைகள் உருண்டு சாலையில் ஓடியதால் குடியிருப்பு நடைபாதைகள், குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
மேலும் அந்த கிராமத்தில் 15 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மலைக்காய்கறி விதைகளும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் காரபிள்ளு கிராமம் அம்மா நாடு என்ற இடத்தில் பெய்த கனமழையால் 30 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட கேரட், வெங்காயம், கிழங்கு, 10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதே போல் உல்லத்தி, மேல் கல்லட்டி, ஏக்குனி ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் சேதம் ஆனது.
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் ஊட்டி தாசில்தார் ராஜசேகா் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். கல்லட்டி மலைப்பாதையில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட கற்கள் மற்றும் சகதியை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
உல்லத்தி ஊராட்சி தலைவர் டி.டி.சந்தோஸ், ஊராட்சி உறுப்பினர் சந்தோஸ் ஆகியோர் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அரிசி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.