உள்ளூர் செய்திகள்
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 30-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு யாகம்
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 30-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு யாகத்தில் கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட் கலந்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஸ்ரீ நாராயணி மூலமந்திர மகா யாகத்தில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டார்.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா இன்று நடந்தது. முன்னதாக நேற்று மாலை 6 மணியளவில் ஸ்ரீ மஹால–ட்சுமி மூலமந்திர மஹா யாகம் நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 10,008 பக்தர்கள் மஞ்சள் நீர் கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து நாராயணி பீடத்தின் சுயம்பு அம்மனுக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்ரீ நாராயணி மூலமந்திர யாகம் நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ்புரம் இயக்குனர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத் அறங்காவலர் சவுந்தர ராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.