உள்ளூர் செய்திகள்
விருதுநகர் தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி- போலீசார் விசாரணை
விருதுநகரில் தி.மு.க. கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 33). இவர் அண்மையில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஆஷா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கூறியுள்ளார். அதில், எங்கள் பகுதியில் வசிக்கும் மேனகா (24), மாரீஸ்வரி (33), கலைச்செல்வி (43) ஆகியோர் சம்பவத்தன்று எனது வீட்டின் முன்பு நின்று கொண்டு என்னைப்பற்றி அவதூறாக பேசினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட 3 பெண்கள் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.