உள்ளூர் செய்திகள்
உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம் - தருமபுரம், மதுரை ஆதீனங்கள் பங்கேற்பு
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் தருமபுரம், மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை முதல் கால பூஜை துவங்கியது.
இதில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டளை தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இரு சன்னிதானங்களும் யாகசாலை பூர்ணாஹீதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் 2 குருமகா சன்னிதானங்கள் சந்தித்து பேசிக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.