மேட்டூர் அருகே டிரைவர் அடித்துக்கொலை
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரம் பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்குமார் (வயது 35) . டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவரது மனைவி, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இதனால் கடந்த 5 வருடங்களாக பொன்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகிலேயே பெற்றோர் பொன்னுசாமி முத்தம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இன்று காலை முத்தம்மாள் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அங்கு பொன்குமார் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்டு முத்தம்மாள் கதறி அழுதார்.
இது குறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மற்றும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்குமார் உடலை பார்வையிட்டனர். அவருடைய முகத்தை மர்மநபர்கள் கொடூரமாக சிதைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையுண்ட பொன்குமாருக்கு வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக தீர்த்துக் கட்டப்பட்டாரா? என தெரியவில்லை.
இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்குமாரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.