உள்ளூர் செய்திகள்
கூடுதல் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
கூடுதல் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன் விடுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு கறம்பக்குடியில் இருந்து காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் கடும் கூட்ட நெரிசலில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக சில கிராமங்களில் பஸ் நிற்காமலேயே சென்று விடுகிறது.
இதனால் மாணவ-மாணவிகள் சரியாக கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவமும் நடந்து உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்றும் கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தங்களில் பஸ் நிற்காமல் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து முதன் கோன்விடுதி நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் பஸ் இயக்க கோரி யும், விபத்தை தடுத்து பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.