உள்ளூர் செய்திகள்
மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்களை தாக்கிய கிராம மக்கள்- 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடியாத்தத்தில் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் தாக்கிய மின்வாரிய ஊழியர்க 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் பல இடங்களில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பங்களில் மீது விழுந்த மரக்கிளைகளை அகற்றி படிப்படியாக மின் வினியோகம் வழங்கினர்.
பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் பல மணி நேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாமல் இருந்தது.
குறிப்பாக கள்ளூர், பாக்கம், சீவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. மரக்கிளைகள் விழுந்த பகுதிகளை பாக்கம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பார்வையிட்டு மரக்கிளைகளை அப்புறப்படுத்தி படிப்படியாக மின்சாரம் வழங்கினார்கள்.
இருப்பினும் சிறிது நேரத்தில் லட்சுமணாபுரம், கள்ளூர் பகுதிகளில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பாக்கம் துணை மின் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.
அப்போது கள்ளூர் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட சிலர் பல மணி நேரம் மின்தடை ஏற்படுத்தியது ஏன் என மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது என விளக்கியுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் துணை மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்தொடர்ந்து வந்த மதன்குமார் மற்றும் சிலர் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களை சித்தூர் கேட் அருகே வழி மடக்கி சரமாரியாக அடித்து தாக்கினர்.
இதில் இளநிலை பொறியாளர் என். பாலகிருஷ்ணன் (வயது 57), போர்மேன் ஆர்.ரவிச்சந்திரன் (60), ஒயர்மேன்கள் ஏ.பிரகாசம் (46), டி.என். பெருமாள் (55), மின் பாதை ஆய்வாளர் சேகர்(50), ஊழியர் ராஜ்குமார் (25) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.