யானை வழிமறித்து நின்றதால் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவம்மாள் (வயது 24).
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்சை அழைத்தனர்.
டிரைவர் ஆனந்தன் ஆம்புலன்ஸ் மூலம் தேவர்மலை கிராமத்திற்கு வந்து சிவம்மாளை பிரசவத்திற்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்லும் வழியில் தாமரைக்கரை அடர்ந்த வன பகுதியில் ஒற்றை யானை ஒன்று சாலையை வழிமறித்தது நின்றது.
தொடர்ந்து அந்த யானை நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் சிவம்மாளுக்கு பிரசவ வலி அதிகமாகவே நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் சிவம்மாளுக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவர் சிவா பிரசவம் பார்த்தார்.
அப்போது சிவம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று அனுமதிக்கபட்டார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.