உள்ளூர் செய்திகள்
கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 32 ஆண்டு ஜெயில் மற்றொருவருக்கு 5 ஆண்டு தண்டனை
வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 32 ஆண்டு ஜெயில் மற்றொருவருக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணும் அதே கடையில் வேலைபார்த்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் இரவு 9 மணி அளவில் அந்த இளம்பெண்ணும், வாலிபரும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கு இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்திருந்த நகைகளை பறித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன் (வயது 43), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற கோழி (21), தொரப்பாடி பெரியஅல்லாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற கொய்யாமாரி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். நீதிபதி கலைபொன்னி விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு அளித்தார்.
அதில் இளம்பெண்ணை மிரட்டல், தாக்குதல், பொருட்கள் பறிப்பு, கடத்தல், பாலியல்பலாத்காரம் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உள்பட மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த மாரிமுத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.