உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கொடுமுடி அருகே காதலியுடன் வீடியோ காலில் பேசி தற்கொலை செய்த வாலிபர்

Published On 2022-04-28 10:20 IST   |   Update On 2022-04-28 10:20:00 IST
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காதலியுடன் வீடியோ காலில் பேசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரஞ்சித் (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மேற்கு அக்ரஹாரம் பகுதியில் தங்கி இருந்து கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பிரசாத ஸ்டாலில் வேலை பார்த்து வந்தார்.

ரஞ்சித் கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தான் காதலிக்கும் பெண்ணுடன் ரஞ்சித் வீடியோ காலில் பேசியுள்ளார்.

அப்போது ரஞ்சித் விரக்தியுடன் பேசியதாகவும், தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவரது காதலியிடம் கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ரஞ்சித்துடன் வேலை பார்த்து வரும் பாண்டியன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக பாண்டியன் ரஞ்சித்துடன் தங்கியிருக்கும் பார்த்தீபன் என்பவரிடம் இதுகுறித்து போனில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பார்த்தீபனும் அவரது உறவினர் ஒருவரும் ரஞ்சித் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சித் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News