உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் சிறைபிடித்த லாரிகள்.

நெமிலி அருகே ஏரி மண் கடத்திய லாரிகள் சிறை பிடிப்பு

Published On 2022-04-26 17:18 IST   |   Update On 2022-04-26 17:18:00 IST
நெமிலி அருகே ஏரி மண் கடத்திய லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பலாம்பட்டு கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.இந்த ஏரியிலிருந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக சுமார் 6 மாத காலமாக மணல் எடுக்கப் பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை எடுத்து சென்றுள்ளனர். 

இதைப் பார்த்த பொதுமக்கள் அரசு அனுமதி அளித்த அளவில் மண் எடுத்து செல்கிறார்களா? அல்லது சட்ட விரோதமாக மணலை கடத்தி தனியாருக்கு விற்பனை செய்கின்றார்களா? என்று பொதுமக் களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம் போல ஏரியில் இருந்து மணலை எடுத்துக்கொண்டு 15 லாரிகள் பனப்பாக்கம் வழியாக சென்றது.அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் லாரிகளை மடக்கி ஏரியில் இருந்து மணல் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டனர்.

இதற்கு லாரி டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே ஆத்திர மடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து பனப்பாக்கம் மயூரா தியேட்டர் எதிரே மணலை லாரிகளில் இருந்து கீழே கொட்ட வைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் பொதுமக்களிடம்  இதுகுறித்து கேட்டறிந்தனர். 

மணல் கடத்தும் நபர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித சமரசமுமின்றி உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News