உள்ளூர் செய்திகள் (District)
விஷம்

காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி

Published On 2022-04-26 06:01 GMT   |   Update On 2022-04-26 06:01 GMT
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் காதல் ஜோடி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நெல்லை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிவன்கோயில் 7வது தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 22) மற்றும் பிரீத்தி (20) என்பது தெரியவந்தது. மேலும் 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அஜித்குமாரும், பிரீத்தியும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள்.

ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேரும் கடந்த 4ந்தேதி அன்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் 2 பேரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி உள்ளனர். எங்கு செல்வது என தெரியாமல் இருவரும் தற்கொலை செய்வதற்காக வி‌ஷம் குடித்தது தெரிய வந்தது.

தற்போது இவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வந்ததும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.
Tags:    

Similar News