கோவையில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
வடவள்ளி:
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரதீஸ். துபாயில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுகன்யா. இவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது மகன் லக்ஷன் (வயது 11). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சுகன்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர்களது அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுவன் லக்ஷன் மாலையில் பூங்காவிற்கு விளையாட சென்றார். அவர் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்த போது பராமரிப்பு இல்லாமல் இருந்த மின்சார வயரை சிறுவன் மிதித்தான். கண்இமைக்கும் நேரத்தில் லக்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதில் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.