உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
சோளிங்கரில் தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல் கூறினர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் இந்த பள்ளி மாணவி எள்ளுப்பாறை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (வயது12) மற்றும் மேல் வன்னியர் தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி செலுத்தியது முதல் லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தது. அவர் சோளிங்கர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது வீட்டிலிருந்து மருந்துகள் எடுத்து வருகிறார்.
இதேபோல மாணவி பிரியதர்ஷினிக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கை கால் செயலிழந்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வருவாய் இன்றி வீட்டில் மருந்து எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் காந்தி ஆகியோர் மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.